திருப்பதி ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்க ரூ.1.5 கோடி - புதிய சேவை அறிமுகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை சுப்ரபாதம் முதல் இரவு ஏகாந்த சேவை வரை நாள் முழுவதும் பெருமாளை தரிசிக்க புதிதாக உதய அஸ்தமன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க ஒன்றரை கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதத்துடன் காலையில் நடை திறந்தது முதல் அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், ஏகாந்த சேவை என இரவு வரை பல்வேறு சேவைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தனித்தனி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, அதனை முன்பதிவு செய்யும் பக்தர்கள் அந்தந்த சேவைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நாள் முழுவதும் பெருமாளை தரிசிக்கும் வகையில் உதய அஸ்தமன சேவை என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பெருமாளை தரிசிக்க விரும்புபவர்கள் சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயும், அபிஷேகம் நடத்தப்படும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்றரை கோடி ரூபாயும் செலுத்த வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த சேவையில் கட்டணம் செலுத்தி பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை என 25 ஆண்டுகளுக்கு பெருமாளை தரிசிக்க முடியும். உதய அஸ்தமன சேவையில் சேரும் நிதி, குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செலவு செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக உதய அஸ்தமன சேவைக்கு 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FgrYzT
via IFTTT
एक टिप्पणी भेजें for "திருப்பதி ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்க ரூ.1.5 கோடி - புதிய சேவை அறிமுகம்"