தனிக் கட்சி தொடங்க திட்டமா? - குலாம் நபி ஆசாத் விளக்கம்
'அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யாராலும் சொல்ல முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார் குலாம் நபி ஆசாத்.
காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், சமீப காலமாக காங்கிரஸ் செயல்பாடுகளில் மிகவும் அதிருப்தியாக காணப்படுகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியில் மிகப்பெரிய மாற்றங்களைக் கோரி கடிதம் எழுதிய 'ஜி23' தலைவர்களின் குழுவின் முக்கியமானவராக குலாம் நபி ஆசாத் மாறினார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் அடுத்த தேர்தலில் 300 இடங்களை வெல்லும் என கருதவில்லை என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள் 20 பேர் காங்கிரஸில் இருந்து தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர்.

இச்சூழலில் சமீபகாலமாக குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த கூட்டங்களில் பேசுகையில் அவர், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதை பதிவு செய்து வருகிறார். இது குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக வியூகங்கள் பரவக் காரணமாக அமைந்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், அதன் பின்னர் என்.டி.டி.வி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு இங்கு அரசியல் செயல்பாடுகளுக்கு எதுவும் இல்லை. அதற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் தான் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி விமர்சனங்களுக்குக் கட்சியில் இடமிருந்தது. ஆனால், இப்போது அதற்கெல்லாம் இடமில்லாமல் போகிவிட்டது.

அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இப்போது எனக்குப் புதிதாகக் கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலில் இருந்து விலகவே விரும்பினேன். இருப்பினும், லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் என்னைத் தொடர்ந்து வலியுறுத்தியதாலேயே தொடர்கிறேன். தற்போதைய சூழலில் எனக்கு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் விருப்பம் இல்லை'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dmpqEa
via IFTTT
एक टिप्पणी भेजें for "தனிக் கட்சி தொடங்க திட்டமா? - குலாம் நபி ஆசாத் விளக்கம்"